‘‘நட்புக்காக வாக்கு சேகரிக்கிறேன்’’ மதுரையில், நடிகர் சமுத்திரகனி பேச்சு

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக நடிகர் சமுத்திரகனி நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கட்சிக்கும், கூட்டணிக்கும் அப்பாற்பட்டு நட்புக்காக வாக்கு கேட்கிறேன், என்றார்.

Update: 2019-04-13 00:13 GMT

மதுரை,

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக செல்லூரில் நடிகரும், டைரக்டருமான சமுத்திரகனி வாக்கு சேகரித்தார். அப்போது தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி உடன் இருந்தார். பிரசாரத்தின் போது சமுத்திரகனி பேசியதாவது:–

மதுரை மக்களின் பிரச்சினையை மக்கள் கூடவே இருந்து தீர்வு காணும் மிக எளிமையான மனிதர் தான் வெங்கடேசன். கட்சிக்கும், கூட்டணிக்கும் அப்பாற்பட்டு, நட்புக்காகவே நான் வாக்கு சேகரிக்கிறேன்.

கீழடி வரலாறு மறைக்கப்பட இருந்தது. அதனை இந்த உலகிற்கு சொன்னவர் வெங்கடேசன். காவல் கோட்டம் மூலம் மதுரையின் வரலாறை எடுத்து சொன்னார். மக்களின் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து அதற்கு தீர்வு காண்பார். அவர் வெற்றி பெற்றால் நாம் வெற்றி பெற்றதாக அர்த்தம். எனவே முதல் தலைமுறை வாக்காளர்கள் வெங்கடேசனுக்கு ஆதரவளித்து, என் நண்பரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்