பூதப்பாண்டி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

பூதப்பாண்டி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-04-13 22:45 GMT
பூதப்பாண்டி, 

இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பூதப்பாண்டி அருகே வாட்ஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் நிசாந்த் ராஜா (வயது 26), பெயிண்டர். இவருடைய மனைவி விஜிலா (21). இவர்கள் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

நிசாந்த் ராஜா கண்டவிளை பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். நேற்று நிசாந்த் ராஜா, தனது குழந்தையுடன் வாட்ஸ்புரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். வீட்டில் விஜிலா மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது, விஜிலா தன்மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜிலா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணவருடன் ஏற்பட்ட தகராறில் விஜிலா தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த விஜிலாவுக்கு திருமணமாகி 1½ வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது. காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்