நாகர்கோவிலில் முதியவரை அடித்துக் கொன்ற பேரன் கைது செலவுக்கு பணம் கொடுக்காததால் ஆத்திரம்

நாகர்கோவிலில் செலவுக்கு பணம் கொடுக்காத ஆத்திரத்தில் முதியவரை அவருடைய பேரனே அடித்துக் கொன்றார்.

Update: 2019-04-14 22:15 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் கீழ புத்தேரி சாஸ்தான் கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 80). இவருடைய பேரன் மகேஷ் (23). அதே பகுதியில் வசித்து வருகிறார். மாணிக்கத்திடம் அடிக்கடி மகேஷ் செலவுக்கு பணம் கேட்பார். உடனே அவரும் பணம் கொடுப்பது வழக்கம். இதே போல் கடந்த 10–ந் தேதியும் தன் தாத்தாவான மாணிக்கத்தின் வீட்டுக்கு மகேஷ் சென்று பணம் கேட்டுள்ளார். ஆனால் அப்போது அவருக்கு மாணிக்கம் பணம் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ் திடீரென மாணிக்கத்தை கம்பால் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த தாக்குதலில் மாணிக்கத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக மகேஷ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மாணிக்கம் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்து செல்லப்பட்டது.

பின்னர் கொலை முயற்சி என்று பதியப்பட்டு இருந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றம் செய்தனர். மேலும் மகேசையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கொலை சம்பந்தமாக அவரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. செலவுக்கு பணம் கொடுக்காத ஆத்திரத்தில் தாத்தாவை பேரனே அடித்துக் கொலை செய்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்