வலங்கைமான் அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

வலங்கைமான் அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-04-14 22:15 GMT
வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள மாணிக்கமங்கலம் குடியான தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி ஜெயலெட்சுமி(வயது65). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஜெயலட்சுமி அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்தனர். அப்போது அதிர்ச்சி அடைந்து கண்விழித்த ஜெயலட்சுமி சங்கிலியை பறித்த ஆசாமிகளுடன் போராடினார். ஆனால் மர்ம ஆசாமிகள் சங்கிலியுடன் வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓடினர். அப்போது ஜெயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மர்ம ஆசாமிகளை விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் பொதுமக்களின் கையில் சிக்காமல் தப்பி ஓடி விட்டனர்.

வழக்குப்பதிவு

இது குறித்து வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் ஜெயலெட்சுமியின் மகன் அறிவழகன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற ஆசாமிகளை தேடி வருகிறார்கள். இந்தநிலையில் ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்த தடயவியல் துறை அதிகாரிகள் வீட்டில் இருந்த தடயங்களை பதிவு செய்தனர். நள்ளிரவில் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியிடம் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் வலங்கைமான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்