வெள்ளிமலை வனப்பகுதியில், விலங்குகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி

வெள்ளிமலை வனப்பகுதியில் விலங்குகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2019-04-14 22:45 GMT
கடமலைக்குண்டு, 

கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், முயல் உள்ளிட்ட விலங்குகள் அதிக அளவில் உள்ளன. வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக வனப்பகுதியில் சிறு ஓடைகள், குளங்கள் அதிக அளவில் உள்ளன. கடந்த சில மாதங்களாக வெள்ளிமலை வனப்பகுதியில் போதிய அளவில் மழை இல்லை. மேலும் வெயிலின் தாக்கமும் அதிக அளவில் உள்ளதால் வனப்பகுதியில் உள்ள ஓடைகள், குளங்களில் நீர் வறண்டு காட்சி அளிக்கிறது.

இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் குடிநீர் தேடி வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகிறது. வனப்பகுதியில் வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளது. எனவே வனவிலங்குகள் குடிநீர் தேடி கிராமத்திற்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் கடந்த சில நாட்களாக வருசநாடு வனத்துறையினர் வெள்ளிமலை வனப்பகுதியில் விலங்குகள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் தொட்டிகள் அமைத்து டிராக்டர் மூலம் நீர் எடுத்து சென்று நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வருசநாடு வனச்சரகர் இக்பாலிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

வனப்பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் இடையே கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. அதனை போக்கும் வகையில் வாரத்தில் 3 நாட்கள் தொட்டிகளில் குடிநீர் நிரப்பும் பணிகள் நடைபெறும்.

தற்போது தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வந்து தண்ணீர் பருகுகின்றன. அடுத்தகட்டமாக வனப்பகுதியில் மேலும் சில இடங்களில் கூடுதல் தொட்டிகள் அமைத்து குடிநீர் நிரப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்