திருவெண்ணெய்நல்லூர் அருகே, மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதல் - 2 பேர் பலி

திருவெண்ணெய்நல்லூர் அருகே மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.

Update: 2019-04-14 22:30 GMT
அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மணக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சுபாஷ் (வயது 24). இவர் தனது சித்தப்பா பழனிவேலின் மகன் சரண்ராஜ் (13) என்ற சிறுவனுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலை காரணமாக மடப்பட்டிற்கு சென்றார்.

பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து மீண்டும் மணக்குப்பத்திற்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சுபாஷ் ஓட்டினார். துலுக்கப்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த மாட்டு வண்டி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

இந்த விபத்தில் சிறுவன் சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். சுபாஷ் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைபார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், சுபாசை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுபாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய் நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்