காதலுக்கு எதிர்ப்பு: விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை காதலன் ஆபத்தான நிலையில் சிகிச்சை

காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது காதலன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2019-04-14 23:00 GMT
தோகைமலை,

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கோபால்பட்டியை சேர்ந்தவர் சின்னையா. இவரது மகள் சங்கீதா (வயது 22). இவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு, திண்டுக்கல் அருகே உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை கலிங்கபட்டி அருகே உள்ள ராஜாளி கவுண்டம்பட்டியை சேர்ந்த நல்லதம்பியின் மகன் கனகராஜ் (26). இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டதால், கரூர் மாவட்டம், புழுதேரி ஊராட்சி சீத்தப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் கனகராஜ் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் கோபால்பட்டி அருகே நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு கனகராஜ் சென்றபோது, சங்கீதாவுக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். கனகராஜூவும், சங்கீதாவும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் உறவினர்கள் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனால் மனமுடைந்த காதல் ஜோடி, விஷம் குடித்து, சீத்தப்பட்டியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் சங்கீதா கழுத்தில் தாலி அணிந்த நிலையிலும், அருகில் கனகராஜூம் மயங்கி கிடந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கனகராஜின் உறவினர்கள் 2 பேரையும் மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரையும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா இறந்தார். கனகராஜ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சங்கீதாவின் தந்தை சின்னையா தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்