கடலூர் முதுநகர் அருகே, ரத்த காயங்களுடன் வாலிபர் பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை

கடலூர் முதுநகர் அருகே ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-04-14 22:00 GMT
கடலூர்முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே உள்ள பச்சையாங்குப்பம் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் பன்னீர் மகன் சசிதரன் (வயது 28), வெல்டர். இவர் நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ளவர்களிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி அலைந்தனர். இருப்பினும் அவர் கிடைக்க வில்லை. இந்த நிலையில் நேற்று காலை பச்சையாங்குப்பம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள தண்டவாளம் அருகே சசிதரன் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சசிதரனின் உடலை பார்வையிட்டனர். சசிதரனின் மார்பு மற்றும் விலாபகுதியில் தீக்காயங்கள் இருந்தன. மேலும் அவரது உடலில் ரத்தகாயங்களும் இருந்தது.

இதையடுத்து போலீசார் சசிதரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சசிதரனை யாரேனும் கொலை செய்து ரெயில் தண்டவாளம் அருகே வீசிசென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சசிதரனுக்கு பிரியங்கா என்ற மனைவியும், 1½ வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

மேலும் செய்திகள்