டோம்பிவிலியில் பாம்பு கடித்து சிறுமி சாவு உறவினர்கள் மாநகராட்சி ஆஸ்பத்திரி முன் போராட்டம்

டோம்பிவிலியில் பாம்பு கடித்து சிறுமி பலியானாள். இந்த சம்பவத்தை அடுத்து உறவினர்கள் மாநகராட்சி ஆஸ்பத்திரி முன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-04-14 22:15 GMT
அம்பர்நாத்,

தானே மாவட்டம் டோம்பிவிலி மேற்கு, மோதாகாவ் பகுதியை சேர்ந்தவர் பிரமோத். ஆட்டோ டிரைவர். இவரது 6 வயது மகள் சுவாரா. சம்பவத்தன்று சிறுமி சுவாரா வீட்டின் முன் விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது அங்கு வந்த பாம்பு அவளை கடித்தது. இதனால் வலிதாங்க முடியாமல் சிறுமி கதறி அழுதாள்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு தாய் வெளியே ஓடிவந்தார். அப்போது சிறுமியை கடித்த பாம்பு புதருக்குள் ஓடி மறைந்தது. இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் உடனடியாக அவளை சாஸ்திரி நகர்பகுதியில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு இருந்த செவிலியர் சிறுமிக்கு முதல் உதவி சிகிச்சை மட்டும் அளித்துவிட்டு அவளை வேறு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லுமாறு கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து சிறுமியை அந்த பகுதியில் உள்ள வேறு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள்.

இந்தநிலையில், மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க தாமதமாக்கியதால் தான் அவர் உயிர் இழந்தார் என குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். மேலும் அவர்கள் மாநகராட்சி ஆஸ்பத்திரி முன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்