தன்னை 2-வதாக திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய காதலன் கைது தடுக்க முயன்ற 2 பேரும் காயம்

தன்னை 2-வதாக திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய காதலனை போலீசார் கைது செய்தனர். இதில் தடுக்க முயன்ற மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-04-14 21:30 GMT
மும்பை,

மும்பை டோங்கிரியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கோரேகாவை சேர்ந்த வாலிபருக்கும் சமீபத்தில் திருமணமாகி இருந்தது. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த சோகைல் கான் (வயது28) என்ற வாலிபர் இளம்பெண்ணை காதலித்து வந்து உள்ளார். இதற்கிடையில் 2-வதாக தன்னை திருமணம் செய்யும் படி சோகைல் கான் அப்பெண்ணிடம் வலியுறுத்தி வந்தார்.

ஆனால் அந்த பெண் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சோகைல் கான் சம்பவத்தன்று அவரது வீட்டிற்கு வந்து அப்பெண்ணின் வயிற்றில் கத்தியால் சரமாரியாக குத்தினார்.

சத்தம் கேட்டு வந்த அப்பெண்ணின் சகோதரர் ருபேல் சேக் (23) உள்பட 2 பேர் சேர்ந்து அவரை தடுக்க முயன்றனர். அப்போது அவர்கள் 2 பேரையும் கத்தியால் பலமாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுபற்றி தகவல் அறிந்த டோங்கிரி போலீசார் காயமடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி சென்ற சோகைல் கானை தேடி வந்தனர்.

இந்தநிலையில், வாடிபந்தர் ரெயில்வே பணிமனை அருகே சுற்றித்திரிந்த சோகைல் கானை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்