முன்விரோதம் காரணமாக வாலிபர் கத்தியால் குத்தி கொலை ஒருவர் கைது

முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி வாலிபரை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-14 21:15 GMT
மும்பை,

மும்பை மான்கூர்டு பி.எம்.ஜி.பி. காலனியில் உள்ள கட்டிடத்தில் வசித்து வந்தவர் ரோகித் கோரி (வயது 26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாபி சவுரசியா (22) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.

இந்தநிலையில், சம்பவத்தன்று மாலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது பாபி சவுரசியா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரோகித் கோரியின் மார்பில் குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் அவர் துடித்தார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த மான்கூர்டு போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து பாபி சவுரசியாவை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்