வாக்குப்பதிவு செய்ய வாக்காளர் புகைப்பட சீட்டை அடையாள ஆவணமாக பயன்படுத்த இயலாது கலெக்டர் தகவல்

வாக்குப்பதிவு செய்ய வாக்காளர் புகைப்பட சீட்டை அடையாள ஆவணமாக பயன்படுத்த இயலாது என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-15 22:45 GMT
திருவாரூர்,

நாடாளுமன்ற தொகுதி தேர்தலுடன் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு வகையான தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 4 லட்சத்து 98 ஆயிரத்து 69 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 10 ஆயிரத்து 93 பெண் வாக்காளர்களும், 36 மூன்றாம் பாலின வாக்காளர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பொதுமக்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஊர்வலம், கோலப் போட்டிகள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம், ஒளியுடன் கூடிய பலூன்கள் பறக்கவிடுதல், தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள் ஆங்காங்கே திரையிடப்படுதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையங்களில் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அடையாள ஆவணம்

வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதற்கு வாக்காளர் புகைப்பட சீட்டினை அடையாள ஆவணமாக பயன் படுத்த இயலாது. வாக்காளர் சீட்டினை வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்பத்த வேண்டும். எனவே வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க செல்லும்போது வாக்காளர் புகைப்பட சீட்டுடன் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள 11 வகையான ஆவணங்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்