வீட்டின் பூட்டை உடைத்து 12½ பவுன் நகைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

திருக்கடையூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-04-15 22:30 GMT
திருக்கடையூர்,

நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே உள்ள மாமாகுடி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது35). இவர் சிற்ப தொழிலாளி. இவருடைய மனைவி சுகன்யா (30) பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பாண்டியன், மயிலாடுதுறையில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று இருந்தார்.

இந்த நிலையில் நேற்று பாண்டியனின் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தனர். இதுபற்றி பாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் பாண்டியன் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 12½ பவுன் நகைகள், வெள்ளி கொலுசு உள்ளிட்டவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் மூலம் துப்பு துலக்கப்பட்டது. வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்ற மோப்ப நாய் பின்னர் நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்