ஊழல் விவகாரத்தில் பதில் சொல்லவில்லை என்றால் ‘ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடருவேன்’ - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி

‘ஊழல் விவகாரத்தில் பதில் சொல்லவில்லை என்றால் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடருவேன்‘ என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

Update: 2019-04-16 22:45 GMT
தேனி,

தேனி நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இறுதிக்கட்ட பிரசாரத்தின் ஒரு பகுதியாக, அவர் கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்துக்கு நேற்று வந்தார். அங்கு பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த பகுதி செழுமையாக இருப்பதற்கு காரணமான பென்னிகுவிக்கிற்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இந்த பகுதி மக்கள் இன்னும் பென்னிகுவிக்கை மறக்காமல் அவர் மீது அன்பு வைத்துள்ளனர். இந்த தேர்தலை பொறுத்தவரையில் எவ்வளவு தான் ஓ.பன்னீர்செல்வம் பணம் கொடுத்தாலும், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்.

என் மீது வழக்குப் போடுவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். நான் இதோடு விடுவது இல்லை. வீட்டுவசதி வாரியத்தில் நிலங்களை அங்கீகாரம் செய்வதில், அவர் செய்கின்ற ஊழலை சொல்ல இருக்கிறேன். அந்த ஊழலுக்கு அவர் பதில் சொல்லவில்லை என்றால் நான் தனிப்பட்ட முறையில், லஞ்சம் வாங்கினார் என்று அவர் மீது வழக்கு தொடருவதற்கு தேர்தலுக்கு பிறகு ஏற்பாடு செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்