அறந்தாங்கி அருகே குடிபோதையில் தகராறு செய்த தந்தை அடித்து கொலை மகன் கைது

அறந்தாங்கி அருகே குடிபோதையில் தகராறு செய்த தந்தையை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-04-16 22:15 GMT
அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா நாகுடி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து, அவருடைய மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். அதேபோல் அவர் கடந்த 14-ந் தேதி வீட்டில் மனைவி மற்றும் மகள்களிடம் தகராறு செய்துள்ளார்.

மேலும் அவர்களை, அவர் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டிற்கு வந்த அவருடைய 17 வயது மகன், எதற்காக எனது தங்கைகள் மற்றும் தாயை அடித்து விரட்டுகிறீர்கள் என்று தந்தையிடம் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து, மகனை அடிக்க பாய்ந்தார். அப்போது மகன் கட்டையை பறித்து, தந்தையின் தலையில் அடித்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்யப்பட்டவரின் மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தகராறு செய்த தந்தையை, மகன் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்