சேலத்தில், வாக்கத்தான் விழிப்புணர்வு ஊர்வலம்
சேலத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி வாக்கத்தான் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.
சேலம்,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ரோகிணி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இதையொட்டி 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் காந்தி மைதானத்தில் ‘வாக்கத்தான்‘ விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதற்கு ரோகிணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு நடைபயிற்சி சென்றவர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகம் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
தொடர்ந்து ஓட்டல் உள்ளிட்ட கடைகளில் துண்டு பிரசுரங்களை வழங்கினர். காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்த வாக்கத்தான் விழிப்புணர்வு ஊர்வலம், தமிழ்ச்சங்கம், அண்ணா பூங்கா வழியாக வந்து மீண்டும் காந்தி மைதானத்தில் முடிவடைந்தது. இதில் பொது மக்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.