அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பகுதிகளில் கள்ளக்குறிச்சி தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம்

அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பகுதிகளில் கள்ளக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பொன் கவுதம சிகாமணிக்கு ஆதரவாக தி.மு.க.வினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

Update: 2019-04-16 23:15 GMT
சேலம்,


கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக டாக்டர் பொன் கவுதம சிகாமணி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. சார்பில் அந்த பகுதிகளில் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான விஜயகுமார் தலைமையில் தி.மு.க.வினர் வீதி, வீதியாக சென்று தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

அப்போது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைகளை வீடு, வீடாக சென்று வழங்கி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதேபோல் உடையாப்பட்டி, மாசிநாயக்கன்பட்டி, அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி மேட்டுப்பட்டி, தாதனூர் ஆகிய இடங்களில் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, விவசாய கடன்கள் தள்ளுபடி, ஏழை மக்களின் 5 பவுன் வரை நகை அடமானக்கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து உள்ளிட்டவை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்து தி.மு.க.வினர் வாக்கு சேகரித்தனர்.

பிரசாரத்தின் போது பேரூர் செயலாளர் சரவணன், ஒன்றிய வக்கீல் பிரிவு துணை அமைப்பாளர் ஜெயசந்திரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார், ஊராட்சி செயலாளர்கள் சிவபாலன், சதீஷ்குமார், சுரேஷ், வெங்கடேசன், வார்டு செயலாளர்கள் ஜெகநாதன், குமார், கோவிந்தன், ஜெகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்