ஒரகடம் அருகே எரிந்த நிலையில் தனியார் நிறுவன ஊழியர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

ஒரகடம் அருகே எரிந்த நிலையில் தனியார் நிறுவன ஊழியர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-04-17 22:30 GMT
படப்பை, 

சென்னை ஆண்டார்குப்பம் பெருமாள் கோவில் தெரு காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 49). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடகால் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2 மாதமாக தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று காலை பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் இருந்து சில அடி தூரத்தில் எரிந்த நிலையில் இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் இது குறித்து ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை யாரேனும் எரித்து கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்குமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் விஜயுடன் தங்கி வேலை செய்து வந்த சென்னையை சேர்ந்த தேவன் (50), கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அஜின் மேஷாக் ( 19), ரெஜு (30), சென்னை ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் (34) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்