ஓசூரில் முன்னாள் கவுன்சிலர் வீட்டில் வருமான வரி சோதனை
ஓசூரில் முன்னாள் கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனீஸ்வர் நகரை சேர்ந்தவர் ராஜா என்கிற இளையபெருமாள். இவர் ஓசூர் நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார். மேலும் கட்டிட ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக ராஜாவின் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று மாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படையினர் என 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ராஜாவின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை இரவு வரை நீடித்தது. வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையில் பணம் எதுவும் சிக்கியதா? என தெரியவில்லை. முன்னாள் கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.