சூரில் குடும்ப தகராறு காரணமாக தூக்குப்போட்டு பெண் தற்கொலை

ஓசூரில் குடும்ப தகராறு காரணமாக தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2019-04-17 22:00 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி காயத்ரி (வயது 31). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. இந்த நிலையில் சசிகுமாருக்கும், காயத்ரிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக காயத்ரி கோபித்து கொண்டு தனது கணவரை பிரிந்து சாந்தி நகரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மேலும் அவர் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட காயத்ரி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் காயத்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருமணம் ஆகி 2 ஆண்டுகளுக்குள் காயத்ரி இறந்துள்ளதால் இது தொடர்பாக ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜூம், துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்