வாழப்பாடி அருகே மான் வேட்டையாடிய 4 பேருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்

வாழப்பாடி அருகே வனப்பகுதியில், மான் வேட்டையாடி கறியை சமைத்து சாப்பிட்ட 4 பேரை பிடித்த வனத் துறையினர், ரூ.80 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். மான் கறி சமைத்த குழம்பு வாசனை வேட்டையாடியவர்களை வனத்துறையினருக்கு காட்டி கொடுத்தது.

Update: 2019-04-17 22:00 GMT
வாழப்பாடி, 

சேலம் மாவட்டம், வாழப்பாடி வனச்சரகம் குறிச்சி பிரிவு விளாம்பட்டி காப்புகாடு செங்காட்டூர் வனப்பகுதியில், சின்ன வேலாம்பட்டி கோவேரி காட்டில் மான் வேட்டையாடிய ஒரு கும்பல், கறியை அறுத்து சமைத்து சாப்பிடுவதாக, வாழப்பாடி வனச்சரகர் ஞானராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து, வனவர்கள் குமரேசன், சிவகுமார், வனக் காப்பாளர்கள் மாணிக்கம், ஜெயக்குமார், ஜெயராமன், சின்னதம்பி, முனீஸ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர் சின்னவேலாம்பட்டி கிராமத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது, சின்னவேலாம்பட்டி கிராமத்தை சேர்ந்த கந்தசாமி (வயது 23), தர்மன்(39), சண்முகம்(45), சின்னசாமி(37) ஆகியோரின் வீட்டில் மான் கறி குழம்பு சமைக்கும் வாசனை வனத்துறையினருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் கையும், களவுமாக பிடித்த வாழப்பாடி வனத்துறையினர், மான் வேட்டையாடி கறியை சமைத்து சாப்பிட்ட 4 பேருக்கும், மாவட்ட வன அலுவலர் பெரியசாமி உத்தரவின் பேரில், தலா ரூ.20 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து மொத்தம் ரூ.80 ஆயிரம் வசூலித்தனர்.

வனவிலங்குகளை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றம் என்பதால், இனி வருங்காலங்களில் மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடும் குற்றச்செயலில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் அவர்கள் 4 பேரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்