தரகம்பட்டியில் குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

தரகம்பட்டியில் குடிநீர்கேட்டு காலிக்குடங் களுடன் பொதுமக்கள் சாலைமறியல் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-04-20 23:00 GMT
தரகம்பட்டி,

கரூர் மாவட்டம், கீரனூர் ஊராட்சி நேசமணிநகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர் களுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நேசமணி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் தரகம்பட்டி ஒன்றியம் அலுவலகம் முன்பு உள்ள கரூர்- மணப்பாறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாச்சலம், மகேஷ்வரன், வருவாய் அலுவலர் பாலச்சந்திரன், கிராம நிர்வாக அதிகாரி பழனியப்பன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் கரூர்்- மணப்பாறை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்