வீட்டிற்குள் புகுந்து கல்லூரி மாணவியை தாக்கி 8½ பவுன் நகைகள் கொள்ளை மர்ம நபர்கள் துணிகரம்

க.பரமத்தி அருகே வீட்டிற்குள் புகுந்து கல்லூரி மாணவியை தாக்கி 8½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.

Update: 2019-04-20 22:00 GMT
க.பரமத்தி,

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள குட்டையன்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மகள் காவியா (வயது 20). இவர் ஈரோடு மாவட்டத்தில் ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை காவியா வெளியே சென்றுவிட்டார். வீட்டில் இருந்த அருணாச்சலம் மதியம் கடைக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார்.

இந்தநிலையில் வெளியே சென்ற காவியா மதியம் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது, வீட்டிற்குள் 3 மர்ம நபர்கள் பீரோவை உடைத்துக்கொண்டிருந்தனர்.

இதை பார்த்த காவியா சத்தம் போட்டார். உடனே மர்ம நபர்கள் 3 பேரும் காவியாவை தாக்கி அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி, 1½ பவுன் கம்மல் ஆகியவற்றை கழற்றினார்கள். மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகைகளையும் அவர்கள் கொள்ளை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து காவியா க.பரமத்தி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், 8½ பவுன் நகைகளை கொள்ளை அடித்து சென்ற 3 மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்