சென்னை முகப்பேரில் ரூ.4 லட்சம் போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது

சென்னை முகப்பேரில் ரூ.4 லட்சம் போதை மாத்திரைகளுடன் நின்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-04-21 23:00 GMT
பூந்தமல்லி,

சென்னை முகப்பேர் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து போதை தடுப்பு பிரிவு போலீசார் அந்த பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு முகப்பேர் பகுதியில் உள்ள நீச்சல்குளம் அருகே மொபட்டில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், திருவல்லிக்கேணியை சேர்ந்த சரத் என்ற சரவணன் (வயது 23) என்பதும், அவரிடம் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் வைத்து இருப்பதும் தெரியவந்தது.

சரவணனை கைது செய்த போதை தடுப்பு பிரிவு போலீசார், அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவருக்கு அந்த போதை மாத்திரைகளை வினியோகம் செய்தது யார்?, அதை எங்கிருந்து வாங்கி வந்தார்?, யாரிடம் கொடுக்க காத்திருந்தார்?, அவர் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவரா? என்பது குறித்து கைதான சரவணனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்