புனே அருகே மகனை கடித்த சிறுத்தைப்புலியை விரட்டியடித்த தாய்

புனே அருகே, மகனை கடித்த சிறுத்தைப்புலியை அவனது தாய் விரட்டியடித்த சம்பவம் நடந்துள்ளது.

Update: 2019-04-21 22:27 GMT
புனே,

புனே அருகே, மகனை கடித்த சிறுத்தைப்புலியை அவனது தாய் விரட்டியடித்த சம்பவம் நடந்துள்ளது.

மகனை கடித்தது

புனே ஜூன்னார் தாலுகா ஒட்டூர் டோல்வாட் கிராமத்தில் கரும்பு வெட்டும் பணிகள் நடந்து வந்தது. இந்த பணியில் தீபாலி என்ற பெண்ணும் அவருடைய கணவர் திலீப்பும் ஈடுபட்டனர். இவர்களுக்கு தையானேஸ்வர் என்ற 1½ வயது மகன் உள்ளான்.

சம்பவத்தன்று இரவு அங்கு அமைக்கப்பட்ட குடிசைக்கு வெளியே மகனுடன் தீபாலி தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு சிறுத்தைப்புலி ஒன்று வந்தது. அந்த சிறுத்தைப்புலி தூங்கி கொண்டிருந்த சிறுவன் தையானேஷ்வரை கடித்தது.

சிறுத்தைப்புலியை தாக்கினார்

இந்தநிலையில், மகனின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த தீபாலி, மகனை சிறுத்தைப்புலி கடித்து குதறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் அவர் அச்சப்படாமல், துணிச்சலுடன் சிறுத்தைப்புலியை அருகில் கிடந்த கம்பால் அடித்தார்.

அப்போது சிறுத்தைப்புலி அவரின் மகனை விடுவித்து தீபாலியின் கையை கடித்தது. எனினும் அவர் தொடர்ந்து சத்தம் போட்டு சரமாரியாக தாக்கியதால் சிறுத்தைப்புலி அங்கிருந்து பயந்து ஓடியது.

சிறுத்தைப்புலி தாக்கியதில் காயமடைந்த தாய், மகனுக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்