விருத்தாசலம் அருகே ஏரியில், அழுகிய நிலையில் பெண் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை

விருத்தாசலம் அருகே ஏரியில் அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-04-21 23:00 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே பரவலூரில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று பெண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியில் ஆடு மேய்த்த தொழிலாளர்கள், உடனே இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகுல் அமீது, சப்-இன்ஸ்பெக்டர் ஆதி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பிணமாக கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டனர். அப்போது அந்த பெண் அரைநிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தது.

இதையடுத்து அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றிய தகவல் கிடைக்கவில்லை. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் இறந்து ஒரு வாரத்துக்கு மேல் இருக்கும் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை யாரேனும் பரவலூர் ஏரிக்கு கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்தார்களா? அல்லது வேறு எங்காவது வைத்து கொலை செய்து விட்டு பிணத்தை ஏரியில் வீசிச் சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரவலூர் ஏரியில் அழகிய நிலையில் பெண் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்