குளத்தில் மூழ்கி மாணவன் சாவு காப்பாற்ற முயன்ற மாமாவும் பலியான பரிதாபம்

பேரளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலியானான். அவனை காப்பாற்ற முயன்ற மாமாவும் உயிரிழந்தார்.

Update: 2019-04-22 23:15 GMT
நன்னிலம்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள இளந்தங்குடி அரிவலூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் திருஞானம். இவருடைய மகன் கவுதமன்(வயது 7). இவன், அருகே உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கவுதமன் பேரளம் அருகே திருமீயச்சூரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு வந்து இருந்தான்.

நேற்று மாலை 5 மணியளவில் கவுதமன் தனது தாத்தா வீட்டின் எதிரில் உள்ள தாமரைக்குளத்தில் குளிப்பதற்காக தனது மாமா தர்மனுடன்(30) சென்றான். இருவரும் குளத்தில் உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரின் ஆழமான பகுதிக்கு கவுதமன் சென்றான். இதனால் தண்ணீரில் மூழ்கி சிறுவன் கவுதன் உயிருக்கு போராடினான்.

அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தர்மன் குளத்துக்குள் நீந்தி சென்று தனது மருமகன் கவுதமனை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் எதிர்பாராதமாக தண்ணீரில் மூழ்கினார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் குளத்திற்குள் இறங்கி நீந்தி சென்று தண்ணீரில் மூழ்கிய கவுதமனையும், தர்மனையும் மீட்டு பேரளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதைத்தொடர்ந்து இருவரின் உடல்களும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குளத்தில் மூழ்கி மாமாவும், மருமகனும் ஒரே நேரத்தில் இறந்த சம்பவம் பேரளம் பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

மேலும் செய்திகள்