கடன் தொல்லை காரணமாக பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை

பல்லடத்தில் கடன் தொல்லை காரணமாக பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-04-22 23:00 GMT

பல்லடம்,

பல்லடம் பெரியார் நகரை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 34). இவர் வடுகபாளையத்தில் கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி யோவன்னா (33). இவர் பல்லடம் அருகே உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு மலர் (7) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கிருபாகரனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடன் வாங்கினார். கடன் பிரச்சினை காரணமாக மிகவும் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த கிருபாகரன் வாழ்க்கையில் வெறுப்படைந்தார். அதைத்தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருபாகரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பல்லடம் போலீசில் அவரது மனைவி யோவன்னா புகார் செய்தார்.

அதன்பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் பிரச்சினை காரணமாக பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்