கோவில் பூசாரியை வெட்டி கொன்ற வழக்கில் 2 மகன்கள் குளித்தலை கோர்ட்டில் சரண்

கோவில் பூசாரியை வெட்டி கொன்ற வழக்கில் அவரது மகன்கள் 2 பேர் குளித்தலை கோர்ட்டில் சரணடைந்தனர்.

Update: 2019-04-22 22:15 GMT
குளித்தலை,

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள அய்யலூர் நயினான் குளத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 60). இவர் அங்குள்ள ஒரு கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். அவருடைய மனைவி வசந்தா. இவர்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இதற்கிடையில் முத்துச்சாமி, நாச்சி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டு மந்தைக்குளம் பகுதியில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 15-ந்தேதி முத்துச்சாமி நயினான்குளத்துபட்டிக்கு சென்றபோது மூத்த மனைவியின் மகன்கள் பாண்டிராஜன் (27), வீரமணி (26) ஆகியோர் சொத்தை பிரித்து தரக்கோரி தனது தந்தை முத்துச்சாமியிடம் கேட்டுள்ளனர்.

வெட்டிக்கொலை

அப்போது முத்துச்சாமிக்கும், மகன்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் 16-ந்தேதி காலை மந்தைக்குளம் பகுதியில் முத்துச்சாமி வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மகன்கள் சரண்

இந்தநிலையில் சொத்து தகராறில் தனது தந்தை முத்துசாமியை வெட்டிக்கொன்றதாக பாண்டியராஜன், வீரமணி ஆகிய இருவரும் நேற்று கரூர் மாவட்டம், குளித்தலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரஸ்நேவ் முன்னிலையில் சரணடைந்தனர். இதையடுத்து விசாரணை நடத்திய நீதிபதி, இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்