கணவர் சமையல் அறை கட்டிக் கொடுக்காததால் இளம்பெண் தற்கொலை அருமனையில் பரிதாபம்

அருமனையில் கணவர் சமையல் அறை கட்டிக்கொடுக்காததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-04-22 22:15 GMT
அருமனை,

குமரி மாவட்டம் அருமனை ஆலரவிளை பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா (வயது 28). இவர், அதே பகுதியை சேர்ந்த டிரைவரான நகுலன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் கர்ப்பம் தரித்த அர்ச்சனா 2-வது பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்றார். தற்போது அர்ச்சனாவுக்கு குழந்தை பிறந்து 2½ மாதங்கள் ஆகிறது. இதற்கிடையே அர்ச்சனா, தன்னுடைய கணவர் நகுலனிடம், வீட்டுக்கு வரும் போது அங்கு புதிதாக சமையல் அறை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால் நகுலன் கட்டித் தருவதாக கூறி ஏமாற்றி விட்டார். இதனால் மனமுடைந்த அர்ச்சனா சம்பவத்தன்று படுக்கை அறையில் தூக்கில் தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் இதுபற்றி அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் சமையல் அறை கட்டிக்கொடுக்காததால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்