திருக்கனூர் அருகே வாலிபர் வெட்டி கொலை சுடுகாட்டில் உடல் வீச்சு

திருக்கனூர் அருகே வாலிபரை வெட்டி கொலை செய்து உடலை சுடுகாட்டில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-04-23 23:15 GMT

திருக்கனூர்,

திருக்கனூர் அருகே சோரப்பட்டு காலனியில் சுடுகாடு உள்ளது. இந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது குறித்து ஆடு, மாடு மேய்க்கச் சென்றவர்கள் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்–இன்ஸ்பெக்டர்கள் வேலு, முருகானந்தம், குமார் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.

சுடுகாட்டையொட்டி புதர் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. நீல நிற சட்டையும், கைலியும் அணிந்திருந்த அவர் யார்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. கழுத்து பகுதியில் வெட்டுக்காயம் காணப்பட்டது. எனவே அவரை வேறு எங்கோ வெட்டி கொலை செய்து விட்டு உடலை இங்கு கொண்டு வந்து போட்டு விட்டு மர்ம ஆசாமிகள் தப்பிச் சென்று இருப்பது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து போலீஸ் ஐ.ஜி. சுரேந்தர் சிங் யாதவ், போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோரும் அங்கு வந்து விசாரித்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த வாலிபரின் சட்டை பையில் 20 ரூபாயும், திருக்கனூரில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்ததற்கான டிக்கெட்டும் இருந்தது.

எனவே, கொலை செய்யப்பட்டவர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம். பெண் விவகாரத்தில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பிணமாக கிடந்தவரை அடையாளம் காண்பதற்காக வானூர், கண்டமங்கலம், விக்கிரவாண்டி ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு புகைப்படத்தை அனுப்பி வைத்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டு வாலிபரின் உடல் சுடுகாட்டில் கிடந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்