ஏற்காட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை சேலம் கோர்ட்டு தீர்ப்பு

ஏற்காட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Update: 2019-04-24 23:00 GMT
சேலம், 

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே வாழவந்தியை அடுத்த பாறைக்காட்டு பகுதியை சேர்ந்தவர் ராமர். இவருடைய மகன் துரைசாமி (வயது 34). இவர் அங்குள்ள ஒரு எஸ்டேட்டில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார்.

இந்த நிலையில் இவர் 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த 26.7.2014 அன்று அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது குறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் கூறி உள்ளார். இது பற்றி சிறுமியின் பெற்றோர் கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் ‘போக்சோ‘ சட்டத்தின் கீழ் துரைசாமி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் அனைத்து மகளிர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதில், குற்றம் சாட்டப்பட்ட துரைசாமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் காந்திமதி வாதாடினார்.

மேலும் செய்திகள்