கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு படகு இயக்கப்படாததை கண்டித்து திடீர் போராட்டம்

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்படாததை கண்டித்து திடீர் போராட்டம் நடத்தப்பட்டது.

Update: 2019-04-25 23:00 GMT
கன்னியாகுமரி,

புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபம், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு படகில் சென்று ரசித்து வருவது வழக்கம்.

இதற்காக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை இயக்கி வருகிறது. திருவள்ளுவர் சிலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையின் கீழ் தளத்தில் நின்று புகைப்படம் எடுத்துச் செல்வது வழக்கம். இங்கு புகைப்படம் எடுக்கும் உரிமத்தை கொட்டாரம் மேலத்தெருவை சேர்ந்த அ.ம.மு.க. நகர செயலாளர் சுரேஷ் (வயது 48) என்பவர் குத்தகைக்கு எடுத்து உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. மேலும், கடல் நீர்மட்டம் தாழ்வு, சீற்றம் போன்ற காரணங்களை காட்டி அடிக்கடி படகு போக்குவரத்தை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் திருவள்ளுவர் சிலைக்கு ரத்து செய்து வருகிறது.

நேற்று மதியம் 2 மணியளவில் சுரேஷ் தனது மனைவி நாகம்மாள், மகள்கள் உமா, பாரதி ஆகியோருடன் படகுத்துறைக்கு வந்தார். பின்னர் அவர், திருவள்ளுவர் சிலைக்கு படகுகள் இயக்கப்படாததை கண்டித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகம் முன் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் சண்முகசுந்தரம் மற்றும் கன்னியாகுமரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆதம் அலி ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திருவள்ளுவர் சிலைக்கு முறையாக படகு போக்குவரத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்