திருவள்ளூர் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

திருவள்ளூர் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2019-04-25 22:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் இருளர் மேடு பகுதியை சேர்ந்தவர் மாரி. இவரது மகன் முருகன்(வயது 23). இவர் கடந்த 20-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் வேலையின் காரணமாக திருவள்ளூருக்கு சென்றார். பின்னர் அவர் வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் தன்னுடைய வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அவர் திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பம் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது மேம்பாலத்தின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முருகனுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்