குடிபோதையில் கர்ப்பிணி மனைவி மீது தாக்குதல்: வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

சீர்காழி அருகே குடிபோதையில் கர்ப்பிணி மனைவியை தாக்கிய வங்கி ஊழியர் மனம் உடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-04-25 22:15 GMT
சீர்காழி,

திருவாரூர் மாவட்டம் குருவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 30). தனியார் வங்கி ஊழியர். இவருடைய மனைவி சூர்யா (29). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது கர்ப்பிணியாக உள்ள சூர்யா, சீர்காழி அருகே நிம்மேலி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி உள்ளார்.

அவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமார் சென்றார். குடிபோதையில் சென்ற ஜெயக்குமார், தனது மனைவி சூர்யாவிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

வங்கி ஊழியர் தற்கொலை

இதில் பலத்த காயம் அடைந்த சூர்யா, சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடிபோதையில் மனைவியை தாக்கி விட்டோமே என்று மனம் உடைந்த வங்கி ஊழியர் ஜெயக்குமார், வைத்தீஸ்வரன்கோவிலில் ஒரு ஓட்டலின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் நவநீதன் கொடுத்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்