பிரம்மதேசம் அருகே, பப்பாளி மரம் முறிந்து விழுந்ததில் சிறுமி பலி

பிரம்மதேசம் அருகே பப்பாளி மரம் முறிந்து விழுந்ததில் சிறுமி பலியானாள்.

Update: 2019-04-25 22:30 GMT
பிரம்மதேசம்,

பிரம்மதேசம் அருகே உள்ள அடசல் கிராமத்தை சேர்ந்தவர் வேலு(வயது 28). இவருடைய மனைவி கவிதா(25). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 2-வது மகள் ரோஷிணி(7). இவள், அதே கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.

பள்ளிக்கூடத்துக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ரோஷிணி, வீட்டின் முன்பு உள்ள பப்பாளி மரத்தின் அடியில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தாள். அந்த சமயத்தில் காற்று வேகமாக வீசியது. இதில் அசைந்தாடிய பப்பாளி மரம் திடீரென முறிந்து, ரோஷிணி மீது விழுந்தது.

இதில் படுகாயமடைந்த அவளை, பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரோஷிணி நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வேலு கொடுத்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்