உடையார்பாளையம் பயறனீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

உடையார்பாளையம் பயறனீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-04-28 22:30 GMT
உடையார்பாளையம்,

ஆண்டு தோறும் நடராஜ பெருமானுக்கு 6 அபிஷேகங்கள் நடக்கும். அதன்படி சித்திரையில் திருவோணம், மார்கழியில் திருவாதிரை, ஆனியில் உத்திரம் ஆகிய நட்சத்திரங்களிலும், மாசி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் சதுர்த்தசியிலும் என வருடத்தில் 6 நாட்களில் நடராஜருக்கு 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம். அந்த வரிசையில் நேற்று சித்திரை திருவோணத்தையெட்டி சிவாலயங்களில் அருள்பாலிக்கும் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் நறுமலர் பூங்குழல் நாயகி சமேத பயறனீஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜருக்கு அபிஷேகம் நேற்று நடந்தது. இதைத்தொடர்ந்து திரவியப்பொடி, மஞ்சள்பொடி, பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பக்தர்கள் தரிசனம்

பின்னர் கோவில் குருக்கள் கோபால், சரவணன், சிவா ஆகியோர் சுவாமிக்கு தீபாராதனை காட்டி பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார். முன்னதாக பூஜையின்போது உடையார்பாளையத்தை சேர்ந்த மூத்த ஓதுவார் சிவபெரியசாமி, சிவநடராஜன், ஆகியோர் தேவாரம், திருவாசகம், பஞ்சபுரான பதிகங்களை பாடி வழிபட்டனர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்