குடிநீர் வழங்கக்கோரி திருவோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகை

குடிநீர் வழங்கக்கோரி திருவோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-02 23:00 GMT
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியம் சங்கரநாதர்குடிக்காடு ஊராட்சி வள்ளிமடத்தோப்பு கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் ஆழ்குழாய் கிணறு பழுது காரணமாக கடந்த சில மாதங்களாக வள்ளிமடத்தோப்பு கிராமத்தில் வசிக்கும் 50 குடும்பங்களுக்கு ஊராட்சியின் மூலம் குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அலுவலகம் முற்றுகை

இந்தநிலையில் சங்கரநாதர்குடிக்காடு வள்ளிமடத்தோப்பு கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நேற்று காலிகுடங்களுடன் திருவோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று குடிநீர் வழங்கக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட கிராம மக்களிடம் திருவோணம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் பொய்யாமொழி, பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் தேவையான நடவடிக்கையினை விரைவாக மேற்கொண்டு குடிநீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்