ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தன்னை திருமணம் செய்யாவிட்டால் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-03 22:10 GMT

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவரின் 26 வயது உடைய இளம் பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மாபாளையம் அருகே சக்தி நாராயணன் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அந்த நிறுவனத்துக்கு வேலைக்கு செல்லாமல் நின்று விட்டார்.

இந்த நிலையில் அவர் வேலையை விட்டு நின்ற பிறகும் சக்தி நாராயணன் அந்த பெண்ணின் செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் தன்னை திருமணம் செய்யாவிட்டால் நிறுவனத்தில் வேலை பார்த்த போது செல்போனில் எடுத்து வைத்து இருந்த போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்குள்ளான அந்த இளம்பெண் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சக்தி நாராயணனை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் சக்திநாராயணன் நிறுவனத்தில் அந்த பெண் வேலை பார்த்த போது அவரை சக்திநாராயணன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இது தெரிந்ததும் அந்த பெண் நிறுவனத்திற்கு வேலை செல்வதை நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சக்திநாராயணன் அந்த பெண்ணை மிரட்டியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்