சின்னசேலம் அருகே, பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - வாலிபர் பலி

சின்னசேலம் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-05-03 22:45 GMT
சின்னசேலம்,

கரூர் ராஜாஜி நகரை சேர்ந்தவர் பாலாஜி மகன் சுஷாந்த்(வயது 29). இவர் தனது காரில் கரூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். காரை கரூர் வையாபுரி நகரை சேர்ந்த சண்முகம் மகன் சதீஷ்குமார்(35) என்பவர் ஓட்டினார்.

இவர்களது கார் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னசேலம் அடுத்த இந்திலி ஜே.ஜே. நகர் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சுஷாந்த், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் சதீஷ்குமார், லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரித்தனர். பின்னர் பலியான சுஷாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்