கஜா புயலில் இழந்த சாலையோர மரங்களை மீட்கும் முயற்சியாக மரக்கன்று நடும் பணியில் சாலை பணியாளர்கள் தீவிரம்

கஜா புயலில் இழந்த சாலையோர மரங்களை மீட்கும் முயற்சியாக சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியில் சாலை பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Update: 2019-05-04 22:45 GMT
கீரமங்கலம்,

கடந்த ஆண்டு நவம்பர் 16-ந் தேதி அதிகாலை கடுமையாக தாக்கிய கஜா புயலின் தாக்கத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மரங்கள், வீடுகள், படகுகள், மின்கம்பங்கள் ஆகியவை உடைந்து சேதமடைந்தன. அதனால் விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அந்த பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை. அதே போல சாலை ஓரங்களில் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக நிழல் கொடுத்துக் கொண்டிருந்த பழமையான ஆலமரம், அரச மரம், புளி போன்ற மரங்களும் சாய்ந்தன. அதனால் தற்போது சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் நிழலுக்கு ஒதுங்க வழியின்றி தவிக்கின்றனர்.

மரக்கன்றுகள் நடும் பணி

தற்போது மரங்கள் இல்லாததால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வடகாடு, மாங்காடு, அணவயல், புளிச்சங்காடு கைகாட்டி வரை சாலை ஓரங்களில் அழிந்த மரங்களுக்கு பதிலாக மாற்று மரக்கன்றுகளை நடும் பணியில் சாலைப் பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், கீழாத்தூர் முதல் சாலை ஓரங்களில் மரங்கள் அடர்த்தியாக நின்றதால் பொதுமக்கள் வெயில் இல்லாமல் நிழலில் பயணித்தார்கள். ஆனால் கஜா புயலில் அந்த மரங்கள் சாய்ந்துவிட்டன. இதனால் மீண்டும் சாலை ஓரங்களில் நிழல் கொடுக்க வசதியாக விரைந்து வளரும் மரக்கன்றுகளை நடும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளோம். சில ஆண்டுகளுக்குள் மீண்டும் சாலை ஓரங்களில் நிழல் கொடுக்கும் மரங்களை வளர்த்துவிடுவோம் என்றனர். 

மேலும் செய்திகள்