ஜெகதேவியில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் சாவு

ஜெகதேவியில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-05-05 22:45 GMT
பர்கூர்,

பர்கூர் அருகே உள்ள ஜெகதேவியில் தனியாருக்கு சொந்தமான கிரானைட் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இதில் அரியானா மாநிலம் கிருஷா தாலுகாவை சேர்ந்த ஹரிஷ் நிர்வான் ராஜ்வா என்பவரின் மகன் அஜய் (வயது 19) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அவர் தேங்காய் உடைக்க எலக்ட்ரானிக் எந்திரத்தை பயன்படுத்தினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அஜய் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் வேலை செய்தவர்கள், வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே அஜய் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கிரானைட் தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்