அதிராம்பட்டினத்தில் பரிதாபம், அரிசி வாங்க சென்ற பெண், டிராக்டர் மோதி பலி

அதிராம்பட்டினத்தில், சமைப்பதற்காக அரிசி வாங்க சென்ற பெண், டிராக்டர் மோதி பரிதாபமாக பலியானார்.

Update: 2019-05-07 23:00 GMT
அதிராம்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாபு. இவரது மனைவி முத்துலட்சுமி(வயது 39). இவர்கள் வெளியூரில் இருந்து வந்து அதிராம்பட்டினத்தில் தங்கியிருந்தனர். பாபு, ஜோசியம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் சமைப்பதற்காக முத்துலட்சுமி, அதிராம்பட்டினம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மளிகைக் கடைக்கு அரிசி வாங்குவதற்காக சென்றார்.

அப்போது அந்த வழியே வந்த ஒரு டிராக்டர் எதிர்பாராதவிதமாக முத்துலட்சுமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துலட்சுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் பழனிவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்