பேரளம் அருகே, ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் 10 பவுன் சங்கிலிகள் பறிப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பேரளம் அருகே ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் 10 பவுன் சங்கிலிகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-05-08 23:00 GMT
நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள பூந்தோட்டம் ரெயிலடி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி மாலதி (வயது41). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பகுதி நேர ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஸ்கூட்டரில் நல்லிச்சேரியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றார்.

கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பூந்தோட்டம் நோக்கி ஸ்கூட்டரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். பேரளம் அருகே கடகம்பாடி பகுதியில் வந்தபோது அவரை மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென மாலதியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் எடை கொண்ட 3 சங்கிலிகளை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாலதி, கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்தார்.

ஆனால் ஆட்கள் வருவதற்குள் மர்ம நபர்கள் 10 பவுன் சங்கிலிகளுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து மாலதி பேரளம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்ச்செல்வன், பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி களை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்