பணியில் அலட்சியமாக இருந்த சீனியர் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் மும்பை போலீஸ் கமிஷனர் நடவடிக்கை

ஆபாச நடனம் அரங் கேறிய பார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணி இடைநீக்கம் செய்து மும்பை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

Update: 2019-05-08 22:30 GMT
மும்பை,

ஆபாச நடனம் அரங் கேறிய பார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணி இடைநீக்கம் செய்து மும்பை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

ஆபாச நடனம்

மும்பை கிராண்ட் ரோடு பகுதியில் உள்ள பாரில் ஆபாச நடனம் நடந்து வருவதாக சமூக குற்றத்தடுப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரை தொடர்ந்து போலீசார் கடந்த மாதம் 27-ந் தேதி அந்த பாரில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், அந்த பாரில் ஆபாச நடனம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பாரின் மேலாளர், ஊழியர்கள் என 51 பேரை கைது செய்தனர். மேலும் 8 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

பணி இடைநீக்கம்

இந்தநிலையில், அந்த பாரில் ஆபாச நடனம் நடந்து வருவதை அறிந்தும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பணியில் அலட்சியமாக இருந்ததாக காம்தேவி சீனியர் இன்ஸ்பெக்டர் கோகுல்சிங் பாட்டீல் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க உதவி போலீஸ் கமிஷனர் பரிந்துரை செய்தார்.

இந்தநிலையில், மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பார்வே நேற்று சீனியர் இன்ஸ்பெக்டர் கோகுல்சிங் பாட்டீலை அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் செய்திகள்