விருத்தாசலம் அருகே, வாலிபரை கொலை செய்த வழக்கில் - 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

விருத்தாசலம் அருகே வாலிபரை கொலை செய்த வழக்கில் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

Update: 2019-05-09 22:45 GMT
கடலூர், 

விருத்தாசலம் அருகே கீழபாலையூரை சேர்ந்தவர் பூவரசன். இவர் கடந்த 24.3.2019 அன்று அங்குள்ள சுடுகாடு அருகில் அதே ஊரை சேர்ந்த நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, அருண்பாண்டியன் ஆகியோருடன் மது குடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ஏற்கனவே அதே ஊரை சேர்ந்த பாலமுருகன் மகன் பாலாஜி (வயது 19), குமாரசாமி மகன் கவியரசன் (19), ஆனந்த், அருண்குமார், 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரும் மது குடித்தனர். அப்போது அங்கிருந்த தேன் கூட்டை கலைத்தது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இந்த மோதலில் 5 பேரும் சேர்ந்து பீர் பாட்டிலை உடைத்து அருண்பாண்டியனை குத்தி கொலை செய்தனர். இது பற்றி பூவரசன் கொடுத்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி, கவியரசன், 17 வயது சிறுவன், ஆனந்த், அருண்குமார் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

இதில் பாலாஜி, கவியரசன் ஆகிய 2 பேரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார். இதையடுத்து பாலாஜி, கவியரசன் ஆகிய 2 பேரையும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவர்களிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.

மேலும் செய்திகள்