திருமருகல் அருகே, வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை - பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

திருமருகல் அருகே வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-05-09 22:15 GMT
திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சேஷமூலை ஊராட்சி மானாம்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்கராசு (வயது 53). இவருடைய மனைவி ராஜவள்ளி (48). சம்பவத்தன்று இவர்கள் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று இருந்தனர். மீண்டும் அவர்கள் தங்களது வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, அறைக்குள் இருந்த 2 பீரோக்களும், மாடியில் இருந்த ஒரு பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.25 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பொருட்கள் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்