கல்லல் வட்டாரத்தில் 704 இடங்களில் மண் பரிசோதனை வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

கல்லல் வட்டாரத்தில் மண்ணின் தன்மையை அறிய 704 இடங்களில் மண் பரிசோதனை செய்யப்படவுள்ளது என்று வேளாண்மை உதவி இயக்குனர் கதிரேசன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-10 23:04 GMT

சிவகங்கை,

கல்லல் வட்டாரம் வேளாண்மை உதவி இயக்குனர் பழ.கதிரேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– கல்லல் வட்டார விவசாயிகள் கோடை உழவு செய்து வரவிருக்கும் பருவமழையில் பயிர் சாகுபடி செய்ய உள்ளனர். அவ்வாறு சாகுபடி செய்வதற்கு முன்பாக மண் மாதிரிகளை ஆய்வு செய்து மண்ணின் தன்மை மற்றும் மண்ணின் குறைபாடுகள் கண்டறிய வேண்டும். பின்பு அவற்றின் தன்மைக்கு ஏற்ப சாகுபடி செய்தால் கூடுதல் மகசூல் பெறலாம்.

இந்த மண் மாதிரிகள் ஆய்வு செய்ய தற்சமயம் ஏற்ற தருணமாகும். இதற்காக வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நீடித்த நிலையான வேளாண்மை திட்டத்தின் கீழ் திட்டத்தில் தற்போது, ஒவ்வொரு வருவாய் கிராமங்கள் அளவில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் கல்லல் வட்டாரத்திலுள்ள 44 வருவாய் கிராமங்களில் மொத்தம் 704 இடங்களில் மண் மாதிரிகள் சேகரித்து அனுப்பப்படவுள்ளது.

இதில் ஒவ்வொரு கிராமத்திலும் 3 இடங்களில் 50 செ.மீ. நீளம் 50 செ.மீ. அகலம் 50 செ.மீ. ஆழம் என்ற அளவில் குழிவெட்டி 25 செ.மீ. ஆழத்தில் ஒரு மண் மாதிரியும் 50 செ.மீ. ஆழத்தில் ஒரு மண் மாதிரியும் எடுக்கப்படவுள்ளது.

அத்துடன் மண்ணின் மேற்பரப்பில் ஆங்காங்கே ஏ வடிவத்தில் வெட்டி 15 செ.மீ. ஆழத்தில் 13 மண் மாதிரிகளையும் சேகரித்து இந்த மாதம் இறுதிக்குள் சிவகங்கையில் உள்ள மண் ஆய்வு நிலையத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது. இந்த திட்டத்தில் வேப்பங்குளம் கிராமத்தில் மண்மாதிரிகள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்