கவர்னர் தனது செயல்பாடுகளை மாற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் - நாராயணசாமி பேட்டி

கவர்னர் தனது செயல்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2019-05-11 00:00 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டும். இதனை எதிர்த்து கவர்னரும், உள்துறை அமைச்சகமும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர கடுமையாக போராடினர். மேலும் இந்த வழக்கை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அவசர வழக்காக எடுத்துக்கொள்ள மறுத்து விட்டது.

கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இனியாவது அவர் தனது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவர் சந்திக்க நேரிடும். அத்துமீறி செயல்பட்ட கவர்னர் கிரண்பெடிக்கு சரியான தீர்ப்பை ஐகோர்ட்டு வழங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு இதனை அவசர வழக்காக கருதவில்லை. இது ஐகோர்ட்டின் தீர்ப்பை அங்கீகரிப்பதாக உள்ளது.

நீட் தேர்வு முறையில் பா.ஜ.க. அரசு பல குளறுபடிகளை செய்துள்ளது. அவர்களின் ஆட்சி முடியப்போகிறது. அடுத்து காங்கிரஸ் ஆட்சி அமையும் போது நீட் தேர்வு நீக்கப்படும். ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிரியங்கா காந்தியும், ராகுல்காந்தியும் அவர்களை மன்னிக்கிறோம் என்ற கூறிவிட்டனர். இதனால் நான் இந்த விஷயத்தில் கட்சியோடு ஒத்துப்போகின்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்