அறந்தாங்கியில் குதிரை, மாட்டு வண்டி பந்தயம்

அறந்தாங்கியில் குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2019-05-12 22:45 GMT
அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் நேற்று மூவேந்தர் பேரவை சார்பில், மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சென்னை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 22 மாட்டு வண்டிகளும், 11 குதிரை வண்டிகளும் கலந்து கொண்டன. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் 7 பெரிய மாட்டு வண்டிகளும், 15 கரிச்சான் மாட்டு வண்டிகளும், பெரிய குதிரை பிரிவில் 11 குதிரைகளும் பந்தயத்தில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தயம் பட்டுக் கோட்டை சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே தொடங்கி குளமங்களம் அருகே உள்ள பெரிய பாலம் வரை 12 கிலோ மீட்டர் தூரம் பந்தைய எல்லையாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

பரிசு

பந்தயத்தில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும் மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்களுக்கும் ரூ.3 லட்சத்து 55 ஆயிரமும், வெள்ளி தார் கம்பும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப் பரிசு, சிறப்பு பரிசு, கேடயங்கள் கொடுத்து கவுரவிக்கப்பட்டது. பந்தயத்தை கான அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டிருந்து கண்டு ரசித்தனர். பாதுகாப்பு பணியில் அறந்தாங்கி போலீசார் ஈடுபட்டு இருந்தனர். 

மேலும் செய்திகள்